நைஜீரியாவில் பயங்கர கலவரம்: 86 பேர் பரிதாப பலி

மத்திய நைஜீரியாவில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 86 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய நைஜீரியாவில் உள்ள பிளாட்டோ மாகாணத்தின் பரிகின் லாடி பகுதியில் நேற்று இரு இனக் குழுவினர்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில், இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் தாக்கி சரமாரியாக அடித்துக் கொண்டனர்.

இந்த கலவரத்தில் சிக்கி சுமார் 86 பேர் பலியாகி உள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். மேலும், 50க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் எதிரொலியாக, கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கலவரத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

More News >>