ஆளுங்கட்சியினரின் விளம்பர பேனர்கள் - உயர் நீதிமன்றம் அதிருப்தி!

உத்தரவை மீறி நடைபாதைகளில் ஆளுங்கட்சியினர் பேனர் வைத்துள்ளதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக நடைபாதைகளில் டிஜிட்டல் பேனர்கள், விளம்பர பேனர்கள் வைப்பதற்கு பல்வேறு விதிமுறைகளை வகுத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

மேலும், சட்ட விரோதமாக டிஜிட்டல் பேனர்கள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆணையிட்டது.

இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில், உத்தரவை மீறி ஆளுங்கட்சியினர் பேனர்கள் வைத்திருப்பதாக தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனிடம் அதிருப்தி தெரிவித்தார்.

இதனால் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டு இருப்பதையும் அவர் சுட்டிகாட்டினார்.

இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர், சாந்தோம் சாலையில் விதிமீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனடியாக அகற்றுவது தொடர்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உத்தரவாதம் அளித்தார்.

மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சாலைகளில் பேனர்கள் வைப்பதை தடுக்க அறிவுறுத்துவதாகவும் உறுதி அளித்தார்.

More News >>