மைதானத்திற்கு கால்பந்து விளையாடவந்த கங்காரு!

ரஷ்யாவில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வரும் நிலையில் ஆஸ்திரேலியாவில் கால்பந்து போட்டி நடந்து கொண்டிருந்த மைதானத்தில் கங்காரு ஒன்று புகுந்து கலக்கியுள்ளது.

சில தினங்களுக்கு முனனர் ஆஸ்திரேலியாவின் தலைநகர் கான்பெராவில், கேப்பிட்டல் ஃபுட்பால் கிளப் மற்றும் பெல்கானென் யுனைடெட் ஆகிய இரண்டு உள்ளூர் பெண்கள் அணிகளுக்கிடையே கால்பந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

போட்டியின் இடைவேளை நேரத்தில் கங்காரு ஒன்று மைதானத்துக்குள் புகுந்தது. அதை விரட்டுவதற்கு செய்த முயற்சிகள் பலிக்கவில்லை. சிலர் பந்தினை மெல்ல கங்காருவின் மீது எறிந்து விரட்ட முயன்றனர்.

ஆனால், அது மைதானத்தை விட்டு நகரவில்லை. ஆறடி உயரத்திற்கு மேல் இருந்த கங்காருவின் அருகில் செல்ல பலர் பயந்தனர். ஆனால், அது யாரையும் தாக்குவதற்கு முயற்சிக்கவில்லை.

பயிற்சியாளர் ஒருவர் சிறிய வாகனம் ஒன்றில் சென்று கங்காருவை விரட்டினார். இதன் காரணமாக அப்போட்டி 32 நிமிடம் தடைபட்டது.

More News >>