நடிகர் ஆர்யா, இயக்குநர் பாலாவுக்கு பிடிவாரண்ட்

'அவன் இவன்' படத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், நடிகர் ஆர்யா, இயக்குநர் பாலாவுக்கு அம்பாசமுத்திரம் நடுவர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

பாலாவின் இயக்கத்தில் விஷால், ஆர்யா நடித்த 'அவன்-இவன்' படம் கடந்த 2011 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. இந்த படத்தில் சிங்கம்பட்டி ஜமீனைப் பற்றியும் காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலைப் பற்றியும் அவதூறான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அக்காட்சிகளை நீக்க வேண்டும் என்று சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி வற்புறுத்தினார்.

இது தொடர்பாக சிங்கம்பட்டி சமஸ்தானம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நடுவர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக நடிகர் ஆர்யா, இயக்குநர் பாலா, படத்தின் தயாரிப்பாளர் ஆஜராக நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், வழக்கு விசாரணைக்கு வந்த போது, நடிகர் ஆர்யா உள்பட 3 பேரும் ஆஜராகவில்லை. இதனைதொடர்ந்து, நடிகர் ஆர்யா, இயக்குநர் பாலா, அவன் இவன் படத்தின் தயாரிப்பாளர் ஆகியோரை கைது செய்ய அம்பாசமுத்திரம் நடுவர் நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கு விசாரணை அடுத்த மாதம் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

More News >>