அயர்லாந்துக்கு எதிராக அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா!

இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்து அணியுடனான இரண்டாவது டி20 போட்டியில் 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அயர்லாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் செய்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இரண்டு போட்டிகளும் டப்ளினிலேயே நடைபெற்றது.

முதல் டி20 போட்டி டப்ளினில் கடந்த 27 ஆம் தேதி நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்தியா, 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டி டப்ளினில் நேற்று நடந்தது. 

இரண்டாவது டி20 போட்டிக்கான டாஸ் வென்ற அயர்லாந்து அணி, பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. இதையடுத்து இந்தியாவின் தொடக்க வீரரில் ஒருவரான லோகேஷ் ராகுல் அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தார்.

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி, 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. இமாலய ரன் இலக்கை கடக்க வேண்டிய கட்டாயத்தில் அயர்லாந்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது.

ஆனால், அந்த அணியின் ஒரு வீரர் கூட 20 ரன்களை எட்டாததால், 12.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் வெறும் 70 ரன்களுக்கு இழந்தது. இதனால் இந்திய அணி 143 ரன்களில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. 

More News >>