தமிழிசை 3 ஆயிரம் ஓட்டு வாங்கினால் கட்சியில் இருந்தே விலகுகிறேன்: புகழேந்தி

பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மூவாயிரம் ஓட்டு வாங்கினால் கட்சியில் இருந்தே விலகுகிறேன் என்று தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை கர்நாடக மாநில அதிமுக செயலாளராக செயல்பட்டு வந்தவர் புகழேந்தி. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், புகழேந்தி தினகரனின் ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார்.

புகழேந்தி கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருமண விழா ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றபோது விபத்துக்குள்ளாகி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து திரும்பிய அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆர்.கே.நகர் தேர்தலில் டிடிவி தினகரனே வெற்றி பெருவார் என ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. இது எங்களுக்கு கிடைத்த வெற்றி. டி.டி.வி. தினகரன் வெற்றி நிர்ணயம் செய்யப்பட்டுவிட்டது. திண்டுக்கல் வெற்றியாக இது மாறும்.

தமிழக மக்களிடம் இருந்து கொள்ளை அடித்த பணத்தை அமைச்சர்கள் ஆர்.கே.நகரில் செலவு செய்ய தயாராக உள்ளனர். அரசியல் அனாதைகள் தான் குக்கரை பற்றி விமர்சிப்பார்கள். அதை பற்றி கவலை இல்லை.

தமிழிசை 3 ஆயிரம் ஓட்டு வாங்கினால் கட்சியில் இருந்தே விலகி கொள்கிறேன். திருமாவளவனை பா.ஜ.கவினர் வம்புக்கு இழுக்கிறார்கள். டிடிவி தினகரனுக்கும் அந்த இரட்டை இலை வழக்கிற்கும் தொடர்பில்லை.

குமரியை கேரளாவில் இணைத்து விடுங்கள் என மக்கள் கூறும் நிலையை விட கேவலம் எதுவும் இல்லை. குமரிக்கு முதல்வர் சென்ற நிலையை பாருங்கள். ஜெயலலிதா ஆட்சியில் இருந்திருந்தால், குமரியில் நான்கு ஐந்து அமைச்சர்கள் முகாமிட்டு இருப்பார்கள், ஆனால் தற்போதய முதல்வர் ஆட்சி போய்விடும் எனவும், அமைச்சர்கள் வசூல் போய்விடும் எனவும் சென்னையிலே முகாமிட்டு இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

More News >>