இது ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி- களிப்பில் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியின் துணை நிலை ஆளுநருக்கு, அரசு விவகாரங்களில் தன்னிப்பட்ட முடிவெடுக்கம் அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

உண்மையான அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மட்டுமே இருப்பதாக ஒரு அதிரடித் தீர்ப்பை தந்துள்ளது, 5 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு. இத்தீர்ப்பை வரவேற்றுள்ளார் புது டெல்லியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். இந்த தீர்ப்பு, துணை நிலை ஆளுநருடன் முட்டி மோதிக் கொண்டிருந்த ஆம் ஆத்மி அரசுக்கு பெரிய வெற்றியை தந்துள்ளது.

மாநில அரசு முடிவெடுக்க முழு சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும் என்றும், துணை நிலை ஆளுநர் அதற்கு தடையாக இருக்கக் கூடாது என்றும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட 5 நீதிபதிகள் அமர்வு கூறியுள்ளது. இந்த தீர்ப்பு குறித்து கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இது டெல்லி மக்களுக்குக் கிடைத்த வெற்றி. இது ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி’ என்று பெருமிதத்துடன் கருத்து கூறியிருந்தார்.

சில நாட்களுக்கு முன் உயர் அதிகாரிகளின் பணி புறக்கணிப்பை முடிவுக்கு கொண்டு வர துணை நிலை ஆளுநர் தலையிட வேண்டும் என கெஜ்ரிவால் உள்பட ஆம் ஆத்மி கட்சியினர் 9 நாட்கள், துணை நிலை ஆளுநரின் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

 

More News >>