தகுதி நீக்க வழக்கு- மூன்றாம் நீதிபதி இன்று மாலை விசாரணை

அதிமுக-விலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்கள் குறித்தான வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

கடந்த ஆண்டு தினகரனுக்கு ஆதரவாக இருந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 18 பேர், ஆளுநர் வித்யாசாகர் ராவிடம், 'எங்களுக்கு முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை. அவரை உடனடியாக மாற்ற வேண்டும்' என்று கோரிக்கை வைத்தனர்.

இதைக் காரணமாக வைத்து தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபோல், 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு விசாரணை முடிந்து கடந்த 14 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

அதில் ஒருவரான சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, 'சபாநாயகர் தனபாலின் உத்தரவு செல்லும்' என்றும் தீர்ப்பளித்தார். இன்னொரு நீதிபதி சுந்தர், 'சபாநாயகர் உத்தரவை செல்லாது' என்று கூறினார். ஒரே வழக்குக்குக்கு இரு வேறு தீர்ப்பு வந்ததால், வழக்கு மூன்றாம் நீதிபதிக்கு மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்னர் நீதிபதி விமலா, மூன்றாவது நீதிபதியாக சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்டார்.

ஆனால், அவருக்கு எதிராக குற்றம் சுமத்திய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களில் 17 பேர், உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தனர். அதில், ‘உச்ச நீதிமன்றம் தகுதி நீக்க வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும்’ என்று கோரினர். இதையடுத்து உச்ச நீதிமன்றம், ‘உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப் படாது. மாறாக, நீதிபதி சத்யநாரயணன் வழக்கை விசாரிப்பார்’ என்று உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று நீதிபதி சத்யநாரயணனுக்குக் கீழ் 18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு இன்று மாலை 4 மணி அளவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News >>