ஸ்டெர்லைட் வேதாந்தா தொடர்ந்த வழக்கு- இன்று விசாரணை

ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா நிறுவனம் தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கு இன்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலை, சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாகக் கூறி அதற்கு எதிராக தொடர்ந்து பல ஆண்டுகளாக போராட்டம் நடந்து வந்தது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது. அப்போது போலீஸார், போராடிய மக்கள் மீது நடத்திய துப்பாக்கிசூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, தமிழக அரசு ஆலையை மூடுவதற்கு அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணைக்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் டெல்லியில் இருக்கும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், வேதாந்தா குழுமம், ‘ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்.

மேலும், ஆலை விவகாரத்தில் தமிழக அரசின் தலையீட்டை மொத்தமாக தவிர்க்கச் சொல்ல வேண்டும். ஆலையில் தற்போது யாரையும் உள்ளே அனுமதிக்க மறுக்கிறார்கள். அப்படியில்லாமல், ஓரிருவரையாவது ஆலைக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும். மேலும், மின்சார உற்பத்தியும் ஆலைக்கு முற்றிலுமாக நிறுதப்பட்டுள்ளது. அந்த நடைமுறையையும் மாற்றச் சொல்ல வேண்டும்’ என்று வழக்கிற்கான மனுவில் குறிப்பிட்டுள்ளது.

இந்த வழக்கின் மீதான விசாரணை தான் இன்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நடைபெற உள்ளது.

More News >>