வெந்நீர் ஊற்றி இளம்பெண் கொலை - சென்னையில் கொடூரம்!

சென்னை பெசன்ட்நகரில், சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளம்பெண் வெந்நீர் ஊற்றி கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை பெசன்ட் நகரில் வசிப்பவர் தொழிலதிபர் முருகானந்தம். காஞ்சிபுரம் அருகே கேஸ் ஏஜென்சி நிறுவனம் நடத்தி வருகிறார். ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்த இளம்பெண் மகாலட்சுமி(19) இவரது வீட்டில் பணிப்பெண்ணாக கடந்த ஐந்து வருடமாக வேலை செய்து வந்தார்.

மகாலட்சுமிக்கு 3 நாட்களுக்கு முன் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஆனால் மருத்துவமனையில் சேர்க்காமல், செவிலியர் ஒருவரை வரவழைத்து வீட்டிலேயே மருத்துவம் பார்த்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு மகாலட்சுமி உயிரிழந்துள்ளார்.

சாஸ்திரி நகர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது, மகாலட்சுமியின் உடலின் பல்வேறு இடங்களில் ரத்தக்காயங்கள், சூடு வைத்த தடயங்கள் இருந்தன.

இதுதொடர்பாக தொழிலதிபர் முருகானந்தனிடம் விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளார். சந்தேகத்தின் அடிப்படையில் அவரது மனைவி சுஷ்மிதா​விடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், “எங்களுக்கு 11 வயதில் மகன் உள்ளான். மகாலட்சுமி எப்போது பார்த்தாலும் எனது மகனுடன் விளையாடிக்கொண்டு இருப்பாள். ஒருநாள் நான் பார்த்தபோது, எனது மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.”

“கடந்த 3 நாட்களுக்கு முன்புகூட எனது மகனிடம் சேட்டைகள் செய்ததை நேரில் கண்டு அதிர்ச்சியடைந்தேன். இதனால் ஆத்திரம் அடைந்து மகாலட்சுமி மீது சுடுதண்ணீரை ஊற்றினேன். இதனால் ஏற்பட்ட காயத்துக்கு வீட்டில் வைத்து சிகிச்சையளித்து வந்தேன். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டாள்"​ என்று வாக்குமூலம் அளித்ததாக போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து இருவரையும் சாஸ்த்திரி நகர் போலீசார் கைது செய்து சைதாப்பேட்டை 11-ஆவது நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் முன்பு ஆஜர்படுத்தினர். நீதிபதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சுஷ்மிதா புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

More News >>