பணிச்சுமை... ஆயுதப்படை பெண் காவலர் தற்கொலை முயற்சி

சென்னையில் ஆயுதப்படை பெண் காவலர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் அம்பிகா. இவர் புதுப்பேட்டை ஆயுதப்படையில் பணிபுரிந்து வருகிறார். அம்பிகாவுக்கு காவல் வாகனங்களில் எரிபொருள் நிரப்பும் பணி வழங்கப்பட்டுள்ளது.

வழக்கம் போல் காலை பணிக்கு வந்த அம்பிகாவை, உயர் அதிகாரி ஒருவர் தவறாக பேசியுதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து அவமானம் தாங்க முடியாத அம்பிகா, மனமுடைந்து எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மயங்கி விழுந்த அம்பிகாவுக்கு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனைக்கு வந்த அம்பிகாவின் கணவர் சாலமனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

பணி ஒதுக்குவதில் உயர் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாகவும், விடுமுறை மற்றும் அனுமதி அளிக்காமல், தொடர்ந்து வேலை வாங்கி வருவதாகவும் அம்பிகாவின் கணவர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணிச்சுமை, விடுப்பின்மை, உயர் அதிகாரிகளின் பாரபட்சம் உள்ளிட்ட பல காரணங்களால் காவலர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை தமிழகத்தில் தொடர்கதையாகி வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.

More News >>