மின் உற்பத்தி பாதிப்பு: சென்னை, புறநகரில் மின்தட்டுப்பாடு அபாயம்

வடசென்னை அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் வட சென்னை அனல் மின்நிலையம் உள்ளது. இதில், இரண்டு நிலைகளில் ஒன்றாவது நிலையில் உள்ள 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதேபோல், 2வது நிலையில் உள்ள 2 அலகுகளில் தலா 600 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2வது நிலையில் உள்ள முதலாவது அலகில் கொதிலன் குழாயில் பழுது ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த அலகில் இருந்து 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதைதவிர, மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக முதலாவது நிலையில் உள்ள 2வது அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால், மொத்தம் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பழுது பார்க்கும பணி நடைபெற்று வருகிறது. இருப்பினும், அதுவரையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

More News >>