வீட்டுப்பாடம்... சிபிஎஸ்இ உத்தரவாதம்

வீட்டுப் பாடம் கொடுக்க தடை விதித்து 2 வாரத்தில் சுற்றறிக்கை அனுப்பப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ உத்தரவாதம் அளித்துள்ளது.

தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வழங்கும் புத்தகங்களை மட்டுமே பயன்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் கொடுக்க கூடாது என உத்தரவிட்டு, இந்த உத்தரவை அனைத்து மாநிலங்களுக்கும் அமல்படுத்த உத்தரவிட்டிருந்தார்.இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தும்படியும், அதுசம்பந்தமாக அறிக்கை அளிக்கும்படியும், அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அனுப்பிய கடிதத்தை, மத்திய அரசு உதவி சொலிசிட்டர் ஜெனரல் தாக்கல் செய்தார். மாநில அரசுகளின் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.சிபிஎஸ்இ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2-ஆம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் கொடுக்க கூடாது என்ற உத்தரவு குறித்து இதுவரை எந்த சுற்றறிக்கையும் அனுப்பவில்லை எனவும், 2 வாரங்களில் சுற்றறிக்கை அனுப்பப்படும் எனவும் உத்தரவாதம் அளித்தார்.இதை பதிவு செய்த நீதிபதி, இதுசம்பந்தமாக அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

More News >>