பள்ளிக் கட்டணம் செலுத்தாததால் அடைத்து வைக்கப்பட்ட குழந்தைகள்!

டெல்லியில் உள்ள ஒரு நர்சரி பள்ளியில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி குழந்தைகள் பள்ளிக் கட்டணம் செலுத்தவில்லை என அப்பள்ளி நிர்வாகம் அந்தக் குழந்தைகளை பாதாள அறையில் வைத்துப் பூட்டியுள்ளது.

ஹுவாஸ் காஸியில் இருக்கும் இப்பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். கட்டணம் செலுத்தவில்லை என குழந்தைகளைக் காலை 7:30 மணியிலிருந்து மதியம் 12:30 மணி வரை பேஸ்மெண்ட் அறையில் அடைத்து வைத்து கொடுமை செய்துள்ளதாக பெற்றோர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட குழந்தை ஒன்றின் தந்தையான ஜியாவுதீன், ‘குழந்தைகளை பேஸ்மன்ட்டில் அடைத்து வைக்கப்பட்டனர். என் குழந்தைக்கு ஃபீஸ் கட்டிய பிறகும், பேஸ்மன்ட்டில் அடைத்து வைத்தனர். குழந்தைகள் தண்ணீர் தாகத்தால் தவிதுள்ளனர். போலீஸ் தான் எங்களுக்கு உதவி செய்து குழந்தைகளை மீட்டுக் கொடுத்தனர்.

நான் ஃபீஸ் கட்டியதற்கான ரசீதை காட்டிய பிறகும், பள்ளியின் தலைமை ஆசிரியர் என்னிடம் மன்னிப்புக் கேட்கவில்லை’ என்று வேதனையுடன் கூறினார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் பிரிவு 75-ன் கீழ் பள்ளிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

More News >>