போலி கணக்குகள் நீக்கம் - டுவிட்டர் பங்குகள் சரிவு

மே மற்றும் ஜூன் மாதங்களில் சமூகஊடகமான டுவிட்டர் 7 கோடி (70 மில்லியன்) பயனர் கணக்குகளை முடக்கியுள்ளது என்று அமெரிக்க பத்திரிகை ஒன்று கடந்த வாரம் செய்தி வெளியிட்டது. அதை தொடர்ந்து டுவிட்டரின் பங்குகள் அமெரிக்காவில் 9% சரிவை சந்தித்தன.

ஃபேஸ்புக், கூகுள், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் போலி கணக்குகள் மற்றும் தவறான தகவல்களை பரப்பும் பயனர் கணக்குகளை அகற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன.

தவறான பரப்புரை செய்யப்படுவதை சமூக ஊடக நிறுவனங்கள் தடுக்க வேண்டும் என்ற கருத்து பரவலாகி வருவதை தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், முதலீட்டாளர்களை பொறுத்தமட்டில் பயனர்களை எண்ணிக்கையே முக்கியமாக கருதப்படுகிறது.

மொத்தம் 33 கோடியே 60 லட்சம் (336 மில்லியன்) பயனர்கள் உள்ள டுவிட்டரில் 7 கோடி பயனர்கள் நீக்கம் என்பது குறிப்பிடத்தக்க எண்ணிக்கையாகும். இரண்டு மாதங்களில் 7 கோடி என்பது, ஒரு நாளுக்கு 10 லட்சம் (1 மில்லியன்) என்ற எண்ணிக்கைக்கு மேல் வருகிறது.

“முப்பது நாட்களுக்கு மேலாக செயல்பாட்டில் இல்லாத கணக்குகளே முடக்கப்பட்டுள்ளன. 7 கோடி கணக்குகள் முடக்கப்பட்டால், நாங்களே அது குறித்து தகவல் தெரிவித்திருப்போம்” என்று டுவிட்டர் நிறுவனத்தில் தலைமை நிதி அலுவலர் நெட் செகல் அறிவித்துள்ளார். ஆனாலும், முன்பு வந்த செய்தி, பங்கு வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

More News >>