மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவராக பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்!

மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவராக பேராசிரியர் கு.ஞானசம்பந்தனை தலைவர் கமல்ஹாசன் நியமித்தார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகம் சென்னை, ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ளது. இன்று தலைமையகத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தத் தலைவர் கமல்ஹாசன், கட்சியின் மூத்த நிர்வாகிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

மகேந்திரன், அருணாசலம், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், சுகா, தங்கவேலு, பாரதி கிருஷ்ணகுமார், நடிகை ஸ்ரீபிரியா, ராஜ்குமார், கமீலா நாசர், சவுரி ராஜன், ராஜசேகரன், சி.கே. குமாரவேல், மூர்த்தி, மவுரியா, ராஜ நாராயணன், ஆர்.ஆர்.சிவா ஆகியோரை உயர்மட்டக் குழு பொறுப்பாளர்களாக கமல்ஹாசன் நியமித்தார்.

இதன் பின்னர் மேடையில் கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், "மாற்றத்தை நோக்கி செயல்படத் தொடங்கியுள்ள நமது மக்கள் நீதி மய்யத்தை அதிகாரப்பூர்வ கட்சியாக தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்த பின்னர் நடக்கும் முதல் கூட்டம் இது. புதிய நிர்வாகிகளாகப் பணியேற்றிருக்கும் அனைவரும் கட்சியை சிறந்த முறையில் வழிநடத்துவர் என்பதை மகிழ்வுடன் அறிவிக்கிறேன்" எனக் கூறினார்.

More News >>