நடத்துனர் இல்லா பேருந்து சேவை... அரசுக்கு நோட்டீஸ்

நடத்துனர் இல்லா பேருந்து சேவைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு போக்குவரத்துறை செலவை குறைக்கும் வகையில், பல்வேறு இடங்களில் நடத்துநர் இல்லாத பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை, விழுப்புரம், கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இந்த நடத்துநர் இல்லா பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மாநில போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆறுமுகநயினார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

பேருந்துகளில் நடத்துனர் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று மோட்டார் வாகனச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் நடத்துனர் இல்லாமல் பேருந்து இயக்குவது மோட்டார் வாகனச் சட்டத்துக்கு எதிரானது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன், மாநகரம் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் நடத்துனர் இல்லாமல் இயக்கப்படுகிறதா? என்பது குறித்து வரும் 18ம் தேதிக்குள் பதிலளிக்க போக்குவரத்து செயலாளருக்கு உத்தரவிட்டார்.

More News >>