தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவு

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 13 பேர் போலீஸால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிமன்றம், ‘போராட்டத்துக்கு முன்னர் எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் பிற ஆவணங்களை அரசு சமர்பிக்க வேண்டும்’ உத்தரவிட்டது. தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை, சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாகக் கூறி அதற்கு எதிராக தொடர்ந்து பல ஆண்டுகளாக போராட்டம் நடந்து வந்தது.

அப்போது போலீஸார், போராடிய மக்கள் மீது நடத்திய துப்பாக்கிசூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, தமிழக அரசு ஆலையை மூடுவதற்கு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணைக்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் துப்பாக்கிசூடு நடத்தியதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இன்று விசாரணைக்கு வந்தது. தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் திலத் தரப்பில் பதியப்பட்ட மனுவில், ‘144 தடை உத்தரவுக்கு யார் அனுமதி கொடுத்தார்கள். துப்பாக்கிசூடு சம்பவம் நடந்த போது ஏன் கலெக்டர் ஊரில் இல்லை. போராட்டம் 99 வது நாள் வரை மிகவும் அமைதியாகத்தானே நடந்து கொண்டிருந்தது. பின்னர் ஏன் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது’ என்று கேள்விகள் எழுப்பப்பட்டது.

இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர், ‘போராட்டத்தின் போது பல போலீஸ்காரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதையும் கணக்கில் கொள்ள வேண்டும்’ என்று கூறினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ‘ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் குறித்து உளவுத்துறையின் அறிக்கையை அரசு சமர்பிக்க வேண்டும். அதேபோல, இது தொடர்பான வீடியோ மற்றும் பிற ஆவணங்களை நீதிமன்றத்திடம் அரசு கொடுக்க வேண்டும்’ என்று கூறி, வழக்கை வரும் 18 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

More News >>