குரங்கணி தீ விபத்து... விசாரணை அறிக்கை சமர்பிப்பு

குரங்கணி தீ விபத்து குறித்த விசாரணை அறிக்கையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அதுல்ய மிஸ்ரா சமர்ப்பித்தார்.

தேனி மாவட்டம் குரங்கணி மலைப் பகுதியில் கடந்த மார்ச் 11-ஆம் தேதி பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி, மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்ட 23 பேர் பலியாகினர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க, வருவாய் துறை செயலாளர் அதுல்யா மிஷ்ரா-வை அதிகாரியாக தமிழக அரசு நியமித்தது.

இவர், விபத்து நிகழ்ந்த பகுதிகளில் ஆய்வு செய்து, அப்பகுதி மக்களிடமும், வன அதிகாரிகளிடமும் நேரடியாக விசாரணை நடத்தினார். குரங்கணி தீ விபத்து தற்செயலாக ஏற்பட்டதா அல்லது, வேண்டுமென்றே தீ வைத்தனரா என்பது போன்ற பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.

மேலும், தீ விபத்தில் சிக்கி இறந்தவர்களின் உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டன. குரங்கணி மலை காட்டுத்தீ விபத்து குறித்து விசாரணை முடிந்தது.

முதலமைச்சர் பழனிசாமியிடம் அதிகாரி அதுல்யா மிஸ்ரா 125 பக்கங்கள் கொண்ட விசாரணை தொடர்பான அறிக்கையை சமர்பித்தார். அறிக்கையில் இடம்பெற்றுள்ள முழு தகவல்கள் இன்னும் வெளியாக வில்லை.

எனினும், வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த கட்டுப்பாட்டு அறையுடன் கூடிய குழு ஒன்றை ஏற்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

சென்னை தலைமைச்செயலகத்தில் நடந்த சந்திப்பின்போது, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

More News >>