சட்டவிரோத பேனர்கள்... அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

சட்டவிரோத பேனர்களை அகற்றுவது தொடர்பான நீதிமன்ற உத்தரவுகள் காகித அளவிலேயே இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்ப்பட்டில் அனுமதியின்றி, பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் ராட்சத விளம்பர பலகைகள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக கூறி, சென்னை சேர்ந்த தட்சணாமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, பலமுறை டிஜிட்டல் பேனர்களை அகற்ற உத்தரவிட்டும் தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் ஏன் எடுக்கவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

“நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த எண்ணமில்லையா ? பல உத்தரவுகள் காகித அளவிலேயே உள்ளன” என்று அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

“நடவடிக்கை எடுத்ததாக நீதிமன்றத்தில் அரசு தெரிவித்தாலும், அதன்பின்னர் அந்த இடத்திற்கு சென்று பார்த்தால் மீண்டும் அதே நிலையில்தான் உள்ளது. நீதிமன்ற வளாகத்தை சுற்றியே பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன” என நீதிபதிகள் குற்றம் சாட்டினர். பின்னர் இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற நீதிபதிகள் பரிந்துரைத்தனர்.

More News >>