ஆணவக் கொலை குறித்து நடிகர் சத்யராஜ் கருத்து

ஆணவக் கொலையை தடுக்க ஒவ்வொரு நபரும் அறிவு பயத்துடன் இருக்க வேண்டும் என நடிகர் சத்யராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எழுதிய 'அமைப்பாய்த் திரள்வோம்' என்ற புத்தகம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. அரசும், மதமும் அதிகார வலிமை கொண்டதாக இருப்பது போல் மக்களும் அதிகார வலிமை பெற வேண்டுமென்றால் அமைப்பாக அணிதிரள வேண்டும் என்பது புத்தகத்தின் மையகரு.

இந்த புத்தகத்தின் பன்முகப்பார்வை நிகழ்வு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடந்தது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மற்றும் நடிகர் சத்யராஜ் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளை சார்ந்த இளைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சத்யராஜ், “கிராமப்புறங்களில் ஆணவக் கொலைகள் நடக்காமல் இருக்க அந்த பகுதியில் இருக்க கூடிய ஒவ்வொரு நபரும் அறிவு சார்ந்த பயத்துடன் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்த முடியும்” என்று தெரிவித்தார்.

More News >>