கைது செய்யப்பட்ட 17 பேர் சார்பாக வாதாட மறுக்கும் வழக்கறிஞர்கள்

சென்னை அயனாவரத்தை சேர்ந்த 12 வயது சிறுமியை சீரழித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 17 பேர் சார்பாக ஆஜராக மாட்டோம் என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் அறிவித்துள்ளது.

சென்னை அயனாவரத்தில் வசிக்கும் 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை சீரழித்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 17 பேரை போலீசார் இன்று சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, நீதிமன்ற வளாகத்தில் சட்டக்கல்லூரி மாணவர்கள் அவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதனால், நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், கைது செய்யபப்பட்ட 17 பேர் சார்பாக வாதாட மாட்டோம் என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன் கூறுகையில், “17 பேருக்கு ஆதரவாக ஆஜராகும் வழக்கறிஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார்கள். மேலும், இலவச சட்ட உதவி மூலம் யார் ஆஜரானாலும் கடுமையாக எதிர்ப்போம். பாதிக்கப்பட்ட சிறுமி குடும்பத்துக்கு தேவையான சட்ட உதவிகள் செய்யப்படும்” என்றார்.

More News >>