திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி

செயற்கை உணவு குழாய் மாற்று சிகிச்சைக்காக திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி, உடல் நலக் குறைவு மற்றும் வயது மூப்பு உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக, சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். அவருக்கான பணிவிடைகளை உதவியாளர்கள் செய்துவருகின்றனர்.

அவ்வப்போது, கருணாநிதி, பேரக் குழந்தைகளுடன் விளையாடும் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகிவந்தன.

இந்நிலையில், செயற்கை உணவு குழாய் மாற்று சிகிச்சைக்காக திமுக தலைவர் கருணாநிதி இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரின் மனைவி ராசாத்தியம்மாள், மகனும் திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் ஆகியோர் உடனிருக்கின்றனர்.

முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா மற்றும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, முரசொலி செல்வம் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

இதனிடையே, சிகிச்சை முடிந்து, கருணாநிதி இன்று இரவுக்குள் வீடு திரும்புவார் என காவிரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

More News >>