உத்தரகாண்டில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 10 பேர் பலி

உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசு பேருந்து ஒன்று இன்று காலை உத்தரகாசியில் இருந்து ஹரித்வார் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. இதில், 25க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

அப்போது, பேருந்து திஹ்ரி மாவட்டத்தின் ரிஷிகேஷ் & கங்கோத்ரி நெடுஞ்சாலையில் பேருந்து சென்றபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், தாறுமாறாக ஓடிய பேருந்து அருகில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில், பயணித்தவர்களில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து மீட்புக் குழுவினர் விரைந்தனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், 6 பேரை மீட்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் அளிக்க அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

More News >>