பால் கொள்முதல் விலை ரூ.25க்கு நிர்ணயம்: பணிந்தது மகாராஷ்டிரா அரசு

மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் போராடி வந்த நிலையில் பால் கொள்முதல் விலை ரூ.25க்கு நிர்ணயித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர், சங்லி, சட்டாரா, புனே ஆகிய மாவட்டங்களில் பால் உற்பத்தி நடைபெறுகிறது. இதேபோல், அஹமத்நகர், நாசிக், ஜலகோன், நாண்டெட் மற்றும் பர்பாணி மாவட்ட மக்களும் கறவை மாடு வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி செய்து வருகின்றனர்.

இவர்களிடம் இருந்து தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பால் ரூ.17க்கு கொள்முதல் செய்து பதப்படுத்தி அதனை பாக்கெட்டுகளில் ரூ.42க்கு விற்பனை செய்கின்றனர்.

இதனால், பால் உற்பத்தியாளர்களுக்கு நினைத்த அளவு லாபம் கிடைப்பதில்லை. இதனால், கொள்முதல் விலையில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.5 உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என்றும், பால் உற்பத்தியாளர்களிடம் அரசு சார்ந்த கூட்டுறவு நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கான விலையை உற்பத்தியாளர்ள் மற்றும் சங்கங்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதைதொடர்ந்து பால் உற்பத்தியாளர்கள் கடந்த மூன்று நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், ஒரு லிட்டர் பாலின் குறைந்தபட்ச விலை ரூ.25க்கு நிர்ணயம் செய்து அம்மாநில அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த விலை நிர்ணயம், வரும் 21ம் தேதி (நாளை) முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>