அணு ஆய்த வல்லரசு வடகொரியா மீது மீண்டும் பொருளாதார தடை!

வடகொரியாவுக்கு அழுத்தம் தரும் விதமாக அந்நாட்டின் மீது ஜப்பான் அரசு பொருளாதார தடைகள் விதித்துள்ளது.

உலக நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களுக்கு இடையிலும் வடகொரியா தொடர்ந்து அணுகுண்டு, ஏவுகணை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் அது தன்னை அணுஆயுத நாடாக அறிவித்து வருகிறது.

இதற்காக வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. ஆனாலும் வடகொரியா தொடர்ந்து தனது அணு ஆயுத, ஏவுகணை திட்டங்களில் உறுதியாக இருக்கிறது.

எனவே, வடகொரியாவுக்கு மேலும் அழுத்தம் தருகிற வகையில், ஜப்பான் நேற்று புதிய பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ஜப்பான் அரசின் தலைமைச்செயலாளர் யோஷிஹிடே சுகா வெளியிட்டார்.

அதில் கூறியுள்ள யோஷிஹிடே, “செப்டம்பர் மாதம் வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஜப்பான் மீது பாய்ந்துள்ள நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு அந்த நாட்டின் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறோம். எனவே வடகொரியாவுக்கு மென்மேலும் அழுத்தம் தருகிற வகையில் புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்படுகின்றன” என்று குறிப்பிட்டார்.

More News >>