பாஜக-வுக்கு எதிரணியும் வாக்களிக்கும்!- அமைச்சர் அனந்த் குமார்

எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இந்த விவாதத்துக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், நிதின் கட்கரி மற்றும் ஆனந்த் குமார் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

பாஜக-வுக்கு நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மை இருப்பதால், இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் கண்டிப்பாக வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும், வெறுமனே வெற்றி பெறுவது மட்டும் பாஜக-வின் எண்ணமாக இருக்கவில்லை. 75 சதவிகித எம்.பி-க்களின் ஆதரவு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இருக்கிறது என்பதை காண்பிக்க, ஆளுங்கட்சி முனைப்பாக இருக்கிறது.

அதன் மூலம், இன்னும் மோடி தலைமையிலான அரசுக்கு கட்சிகளுக்கு மத்தியில் செல்வாக்கு உள்ளது என்பதை காண்பிக்க முடியும் என்று பாஜக வட்டாரம் நம்புவதாக தெரிகிறது. குறிப்பாக 350-க்கும் கூடுதலான எம்.பி-க்களின் ஆதரவு தேஜகூ-விற்கு இருக்கிறது என்பதை காண்பிக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது.

இதையொட்டிதான் மத்திய அமைச்சர் ஆனந்த் குமார், ‘தேசிய ஜனநாயக கூட்டணிக்கு உள்ளே மட்டுமல்ல, வெளியே இருந்தும் எங்களுக்கு ஆதரவு வரும்’ என்று தெரிவித்துள்ளார். தற்போது நிலவரப்படி மொத்தம் இருக்கும் 533 எம்.பி-க்களில், தேஜகூ பக்கம் 312 பேர் உள்ளனர்.

More News >>