மருத்துவப் படிப்புக்கான 2 ஆம் கட்ட கலந்தாய்வு எப்போது?

மருத்துவப் படிப்புக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு குறித்த அட்டவணை ஓரிரு தினங்களில் வெளியிடப்படும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடப்பு கல்வியாண்டுக்கான மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையின் முதற்கட்ட கலந்தாய்வு கடந்த 1-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை நடந்தது. இதில் 3 ஆயிரத்து 582 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும் புதிய தரவரிசை பட்டியலை வெளியிடவும் சிபிஎஸ்இக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு விட்டது. இதனை எதிர்த்து சிபிஎஸ்இ தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு தடை விதித்தது.

இதனையடுத்து, மருத்துவ படிப்பின் 2-ஆம் கட்ட கலந்தாய்வு தேதிகளை எதிர்பார்த்து மாணவர்கள் காத்திருக்கின்றனர். இது குறித்து மருத்துவ கல்வி இயக்குநர் எட்வின் ஜோவிடம் கேட்ட போது, "உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு உச்சநீதிமன்ற தடை விதித்த உத்தரவின் நகல் கிடைத்தாவுடன், மருத்துவ கலந்தாய்வுக்கான நடைமுறைகள் தொடங்கும்" என்றார்.

"தமிழக அரசு மற்றும் சட்ட ஆலோசனைகள் பெற்ற பிறகு, கலந்தாய்வு குறித்த அட்டவணை வெளியிடப்படும். இன்னும் ஓரிரு தினங்களில் கலந்தாய்வு தேதி குறித்த தெளிவான அறிவிப்பு வெளியாகும்"

"அகில இந்திய அளவிலான 2ஆம் கட்ட கலந்தாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, மீதம் உள்ள இடங்கள் தமிழக ஒதுக்கீடுட்டுக்குச் சமர்பிக்கப்படும். அதன் பின்னரே, 2ஆம் கட்ட கலந்தாய்வு தொடங்கும்" என எட்வின் ஜோ தெரிவித்துள்ளார்.

More News >>