சொந்தமாக செயற்கைகோள் - ஃபேஸ்புக் முயற்சி

இணைய சேவை இல்லாத இடங்களில், சரியாக தொடர்பு கிடைக்காத இடங்களில் வசிக்கும் மக்களும் இணையசேவையை பயன்படுத்த உதவியாக இணையசேவைக்கென செயற்கைகோள் (satellite) ஒன்றை நிறுவுவதற்கான முயற்சியில் ஃபேஸ்புக் ஈடுபட்டுள்ளது.

அமெரிக்காவின் தகவல்தொடர்பு ஆணையத்தில் (US Federal Communications Commission - FCC)அளித்துள்ள விண்ணப்பத்தில் “உலகம் முழுவதும் சேவை இல்லாத மற்றும் போதுமான சேவை கிடைக்காத பகுதிகளுக்கு அகனற் கற்றை (broadband) இணைய சேவையை வழங்குவதற்காக” என்ற காரணத்தை ஃபேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

“இப்போது இந்த முயற்சியை குறித்து விரிவாக எதுவும் கூற இயலாது. ஆனால், செயற்கைகோள் தொழில்நுட்பம், அகன்ற கற்றை சேவையினை சரியான தொடர்பு வசதியில்லாத கிராமப்புற பகுதியிலும் பெற்றுக்கொள்ள உதவும். அடுத்த தலைமுறையினர் பயன்பெற ஏதுவாக இந்த முயற்சியை செய்கிறோம்” என்று ஃபேஸ்புக் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

‘ஏதெனா’ (Athena) என்று இந்த செயற்கைகோள் திட்டத்திற்கு ஃபேஸ்புக் பெயர் சூட்டியுள்ளது. அடுத்த ஆண்டு 2019 ஆரம்பத்தில் ஏதெனா சேவை வழங்க ஆரம்பிக்கும் என கூறப்படுகிறது.

இதற்கு முன் சூரிய ஒளியினால் பறக்கும் டிரோனை பயன்படுத்தி இணைய சேவை வழங்கும் முயற்சியில் ஃபேஸ்புக் ஈடுபட்டது. 2014-ல் தொடங்கிய 'ஆக்கில்லா' (Aquila) என்ற முயற்சி 2017-ல் இரண்டாவது சோதனை முயற்சி முடிந்த பிறகு கைவிடப்பட்டது. ஹெலிகாப்டர் மூலமாக எடுக்கப்பட்ட முயற்சியையும் இந்நிறுவனம் முன்பு கைவிட்டுள்ளது.

செயற்கைகோள் மூலம் இணைய சேவை வழங்கும் முயற்சியில் ஃபேஸ்புக் மட்டுமின்றி, ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX)மற்றும் ஒன்வெப் (OneWeb)ஆகிய நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன.

More News >>