படிக்கட்டில் தொங்கியபடி மின்சார ரயிலில் பயணம்: மின்கம்பத்தில் இடித்து 4 பேர் பலி

சென்னை பரங்கிமலையில், மின்சார ரயில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த நான்கு பேர் மின்கம்பம் இடித்து விழுந்ததில் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை, மாம்பலம் ரயில் தடத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் புறநகர் ரயில் சேவை, விரைவு ரயில்கள் செல்லும் தண்டவாளத்தில் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

அப்போது, சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூர் நோக்கி சென்ற மின்சார விரைவு ரயில் இன்று காலை புறப்பட்டுச் சென்றது. இதில், பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் பலர் பயணித்தனர். ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால், நிற்க கூட இடம் கிடைக்காத சிலர் ரயிலின் படிக்கட்டில் தொடங்கியபடி பயணம் செய்து வந்தனர். அப்போது, மின்கம்பத்தில் மோதியதில் ஓடும் ரயிலில் இருந்து பலர் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து உடனே ரயில் நிறுத்தப்பட்டு, பலத்த காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 7 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல், பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று இரவு மின்கம்பத்தில் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த உயிரிழப்புகளின் அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலையில், மீண்டும் 4 பேர் உயிரிழந்த சம்பவம் ரயில் பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

More News >>