மூன்றாம் பாலினத்தவர் மீது பாரபட்சமா?- ஏர் இந்தியா மீது வழக்கு

ஏர் இந்தியா நிறுவனம் திருநங்கை ஒருவரின் பணி நியமனத்தில் பாரபட்சத்துடன் நடந்து கொண்டதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, கவாலிகர் மற்றும் சந்தராசூத் ஆகிய 3 பேர் நீதிபதிகள் அமர்வுக்குக் கீழ் இன்று திருநங்கை ஷானவி பொன்னுசாமி தொடுத்திருந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு, ஜூலை 10 ஆம் தேதி, ஏர் இந்தியா நிறுவனம் அதன் கேபின் குழு வேலைக்காக விண்ணப்பம் கோரியிருந்தது. விண்ணப்பத்தில் ஆண் மற்றும் பெண் என்கின்ற இரண்டு பிரிவுகள் மட்டுமே இருந்துள்ளது.

மூன்றாம் பாலினத்தவருக்கான பகுதி இல்லாததால், பெண் என்ற பிரிவை தேர்ந்தெடுத்து விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அனுப்பி வைத்துள்ளார் ஷானவி. இதையடுத்து, ஷானவிக்கு நேரில் வரச் சொல்லி அழைப்புக் கடிதம் வந்துள்ளது. க்ரூப் டிஸ்கஷன் மற்றும் பல்வேறு கட்ட நேர்காணல் முறைக்குப் பிறகு ஷானவி நிராகரிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து ஷானவி, பாரபட்சம் காட்டும் விதத்தில் என்னை ஏர் இந்தியா நிறுவனம் நடத்தியுள்ளது என்று குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 2016 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மூன்றாம் பாலினத்தவர்கள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தின் படி, எந்த வித ஒதுக்குதலும் சட்டப்படி குற்றமாக இருந்து வருகிறது. எனவே, பணி சார்ந்த விஷயங்களில் ஒரு நபர் திருநங்கையாக இருப்பதைக் காரணம் காட்டி ஒதுக்குவது கூடாது. மேலும், 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம், பணி கோரும் விண்ணப்பங்களில் மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கான படிவம் மற்றும் பிரிவுகள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று வழிகாட்டியுள்ளது.

More News >>