ஓபிஎஸ் மீதான விசாரணையை துரிதப்படுத்துங்கள்!- நீதிமன்றம்

தமிழக துணை முதுல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி ஊழல் புகார் சுமத்தியுள்ளார். இது குறித்து அவர், ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு இயக்ககத்திடம் மூன்று மாதங்களுக்கு முன்னர் புகார் அளித்தார். சில நாட்களுக்கு முன்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பாரதி, ‘புகார் கொடுத்து பல மாதங்கள் ஆகிய நிலையிலும் இன்னும் விசாரணை நடத்தப்படவில்லை’ என்று மனுத் தாக்கல் செய்தார்.

இதையடுத்து நீதிமன்றம், ‘ஏன் இன்னும் ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு இயக்ககம் விசாரணையைத் தொடங்கவில்லை. ஏன் சிபிஐ-க்கு இந்த வழக்கை மாற்றக் கூடாது’ என்று கேள்வி எழுப்பியது.

திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி, மூன்று மாதங்களுக்கு முன்னர் ஓ.பன்னீர்செல்வத்தின் மீது கொடுத்த புகாரில், ‘தன் பதவியை பயன்படுத்தி பல கோடி ரூபாய் சொத்து சம்பாரித்து, அதை பல நிறுவனங்களில் ஓ.பி.எஸ் முதலீடு செய்துள்ளார். இவை அனைத்தையும் அவர் பினாமி மூலம் நிர்வகித்து வருகிறார்.

மேலும், தனது வருமான வரி கணக்குகள் குறித்து தவறான தகவல்களை தேர்தல் ஆணையம் முன்பு அவர் சமர்பித்துள்ளார்’ என்று பல ஆவணங்களை ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு இயக்ககத்திடம் சமர்பித்தார்.

இது குறித்தான வழக்கு விசாரணை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் நீதிமன்றம், ‘துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மீதான ஊழல் புகார் விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும்’ என்று ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு இயக்ககத்திடம் உத்தரவிட்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

More News >>