முடிவுக்கு வந்தது ஸ்டிரைக்: நள்ளிரவு முதல் லாரிகள் இயக்கம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு வாரக்காலத்திற்கும் மேலாக நடத்தி வந்த லாரிகள் ஸ்டிரைக் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து வாபஸ் பெறப்பட்டது. இதனால், லாரிகள் இன்று முதல் இயங்கத் தொடங்கின.

சுங்கக்கட்டணம் வசூலிக்கும் நடைமுறையில் மாற்றம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஜிஎஸ்டி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20ம் தேதி முதல் நாடு முழுவதும் காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெற்று வந்தது. லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தால் காய்கறி விலைகள் கிடுகிடுவென உயர்ந்தது. இதனால், பொது மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் சுமார் 4 லட்சம் சரக்கு வாகங்கள் இயக்கப்படாததால் 7 லட்சம் ஓட்டுனர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும், வேலை நிறுத்தம் எதிரொலியாக நாள் ஒன்றுக்கு ரூ.250 கோடி வரை இழப்பு ஏற்பட்டது. லாரி ஓட்டுனர்கள், க்ளீனர்கள் என லட்சகணக்கானோர் வேலையை இழந்தனர்.

இதனால், மத்திய அரசு லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட பலர் வலியுறுத்தினர்.

இதையடுத்து, போக்குவரத்து அமைச்சக அதிகாரிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதன் எதிரொலியாக, நேற்று நள்ளிரவு முதல் லாரிகள் இயக்கப்பட்டன.

More News >>