கருணாநிதி சீரியஸ் வதந்தி: அதிர்ச்சியில் திமுக நிர்வாகி உயிரிழப்பு

கருணாநிதியின் உடல்நிலை மோசமானதாக கிடைத்த தகவலை அறிந்து அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு திமுக நிர்வாகி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில ஆண்டுகளாக வயது முதிர்வு காரணமாக கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். சுவாசப் பிரச்னை ஏற்பட்டதை அடுத்து அவருக்கு செயற்கை சுவாசக் குழாய் பொருத்தப்பட்டது. இதனால், அவ்வப்போது காவேரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கு மருத்துவ பரிசோதனை செய்துவிட்டு வீடு திரும்புவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கருணாநிதியின் உடல் நலிவுற்றது. இதனால், அவருக்கு வீட்டில் இருந்தபடியே மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், நேற்று இரவு கருணாநிதியின் உடல்நிலை மோசமானதால் அவரை உடனே, காவேரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின.

இந்நிலையில், கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேள்விப்பட்ட திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையைச் சேர்ந்த திமுக நிர்வாகி தமீம் (50) அதிர்ச்சியில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More News >>