இப்போதாவது நீங்கள் உண்மைகளை உணர்வீர்களா? - மோடிக்கு பிரகாஷ்ராஜ் கேள்வி

குஜராத் தேர்தல் மூலம் நீங்கள் சில உண்மைகளை உணர நேரம் ஒதுக்குவீர்களா? என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பிரதமர் நரேந்திர மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

நடந்து முடிந்த 182 இடங்கள் கொண்ட குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக 99 இடங்களை பிடித்து தொடர்ந்து 6ஆவது முறை பாஜக ஆட்சியமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.அதில், “அன்புள்ள பிரதமரே, வெற்றிக்கு வாழ்த்துகள்... ஆனால் நீங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறீர்களா?” என்று கேட்டுள்ளார்.

மேலும் தெரிவித்துள்ள பிரகாஷ்ராஜ், “நீங்கள் உங்கள் வளர்ச்சி அரசியலால் இத்தேர்தலில் அமோக வெற்றியல்லவா பெற்றிருக்க வேண்டும்... 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவது என்னவாயிற்று???..

இப்போதாவது நீங்கள் சில உண்மைகளை உணர நேரம் ஒதுக்குவீர்களா?...

1. பிரிவினைவாத அரசியல் எடுபடவில்லை என்பதை உணர்வீர்களா?

2. பாகிஸ்தான்.. மதம்.. சாதி.. என சமூகத்தை அச்சுறுத்தும் சில அடிப்படைவாதிகள் ஆதரிக்கும் இத்தகைய கொள்கைகளைத் தாண்டியும் இந்தியாவில் மிகப் பெரிய பிரச்சனைகள் உள்ளன என்பதை உணர்வீர்களா?

3. கிராமப்புறங்களில்தான் தீர்க்கப்பட வேண்டிய உண்மையான சிக்கல்கள் இருக்கின்றன என்பதை உணர்வீர்களா? விவசாயிகள்... ஏழைகள்.. கிராமவாசிகளின் புறக்கணிக்கப்பட்ட குரல் இப்போது வலுப்பெற்றிருக்கிறது.அது உங்களுக்கு கேட்கிறதா..?சும்மாதான் கேட்கிறேன்...” என்று மோடிக்கு பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

More News >>