இரு பிள்ளைகளுடன் தீக்குளிக்க முயன்ற தாய் - விழுப்புரத்தில் பரபரப்பு

கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி இரு குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயன்றதால் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் முத்தையால் நகரில் வசித்து வருபவர் வள்ளியம்மாள் (வயது 28). இவர் தனது மகள் சுவேதா (10), மகன் மேகநாதன் (8) ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.

அலுவலக நுழைவுவாயிற்குள் வந்த வள்ளியம்மாள், குழந்தைகள் மீதும், தனது தலைமை மீதும் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதை சற்றும் எதிர்பாராத அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று 3 பேரையும் தடுத்து நிறுத்தி அவர்கள் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேன் மற்றும் தீப்பெட்டியை பறித்தனர்.

அதன் பிறகு வள்ளியம்மாளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, "தானும், தமது கணவர் கோபியும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். கடந்த 2014ஆம் ஆண்டு குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்ற எனது கணவர் கோபி, தற்போது தமிழகத்திற்கு திரும்பியுள்ளார்.

"எனது கணவர் நல்ல வேலையில் இருப்பதை தெரிந்துகொண்ட அவரது சகோதரிகளில் ஒருவர் அவர்களது மகளை எனது கணவருக்கு 2வது திருமணம் செய்து வைக்க முடிவு செய்து என்னை பற்றி தவறான தகவல்களை எனது கணவரிடம் கூறி வருகின்றனர்" என வள்ளியம்மாள் தெரிவித்தார்.

"அதோடு என் கணவரை வீட்டிற்கு அனுப்பாமல் அவர்களது வீட்டிலேயே தங்க வைத்துள்ளனர். இதுகுறித்து நான் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை."

"இதனிடையே எனது கணவர் வருகிற 13ஆம் தேதி எங்களை ஏமாற்றிவிட்டு மீண்டும் குவைத்திற்கு செல்ல உள்ளதாக தெரிகிறது. அவ்வாறு குவைத் சென்று விட்டால் அவரை எங்களால் சந்திக்க முடியாது. நானும், எனது பிள்ளைகளும் உயிரை மாய்த்துக்கொள்வதை தவிர வேறு வழியில்லை. எனவே இதுகுறித்து விசாரித்து எனது கணவரை என்னுடன் சேர்த்து வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என அந்த பெண் வள்ளியம்மாள் கேட்டுககொண்டுள்ளார்.

இதை கேட்டறிந்த காவல்துறையினர், இதுகுறித்து ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவனத்திற்கு எடுத்து சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அந்த பெண்ணிடம் உறுதி அளித்தனர். மேலும் ஆட்சியர் அலுவலகத்தில் இதுபோன்ற அசம்பாவித செயலில் ஈடுபடக்கூடாது என அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

More News >>