சமூக கட்டமைப்பு தவறு- பாலியல் குற்ற வழக்கில் நீதிமன்றம் வேதனை

நமது சமூகக் கட்டமைப்பில் தவறு உள்ளதால் தான் பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் காணப்படுகிறதா என உயர் நிதிமன்ற நீதிபதி கிருபாகரன் வருத்தம் தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், பாலியல் குற்றங்கள் மீதான வழக்கை விசாரித்தார் நீதிபதி என்.கிருபாகரன். அப்போது அவர், ‘புனித பூமி என்ற சொல்லப்படும் நம் நாடு பலாத்கார நாடாக மாறிக் கொண்டிருக்கிறது. குழந்தைகள் கூட பாலியல் வெறி கொண்ட கொடூரர்களால் விட்டுவைக்கப்படுவதில்லை.

இந்த சமூக கட்டமைப்பிலோ அல்லது ஆண்களின் மன நிலையிலோ எதோ ஒன்று தவறாக உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி பெண்களுக்கு எதிராக பெருகி வரும் பாலியல் குற்றங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்துக்கும் பல கேள்விகள் எழுப்பியிருந்தோம்.

அதேபோல தமிழக உள்துறை செயலாளருக்கும் கேள்விகள் எழுப்பியிருந்தோம். இதுவரை அதற்கு எந்த பதிலும் மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் அளிக்கப்படவில்லை. அவர்கள் சரிவர பதில் அளிக்கவில்லை என்றால், அடுத்த முறை வழக்கு விசாரணைக்கு வரும் போது நேரில் ஆஜராக வேண்டும்’ என்று கூறினார்.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி கிருபாகரன், பாலியல் தாக்குதல்களை சமாளிக்க பெண்களுக்கு எதாவது பாதுகாப்பு சாதனம் வழங்கலாமா என்பது குறித்து ஆராய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால், இதுவரை அதற்கு அரசு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

More News >>