மன உறுதியுடன் இருக்கும் கருணாநிதி: நலம் விசாரித்த ராகுல் காந்தி பேட்டி

திமுக தலைவர் கருணாநிதி தமிழக மக்களை போலவே மன உறுதியுடன் இருக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்த பிறகு பேட்டி அளித்தார்.

திமுக தலைவர் கருணாநிதி வயது முதிர்வு மற்றும் சிறுநீரக தொற்று காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ஐசியுவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நான்காவது நாளாக சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை பல்வேறு கட்சி பிரமுகர்களும் நேரில் பார்த்துவிட்டு, குடும்பத்தினரிடம் நலம் விசாரித்து செல்கின்றனர்.அந்த வகையில், இன்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கருணாநிதியை நேரில் சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி கூறியதாவது: திமுக தலைவர் கருணாநிதியை நேரில் பார்த்தேன். உடல் நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் விசாரித்து தெரிந்துக் கொண்டேன்.

தமிழக மக்களை போலவே கருணாநிதியும் மன உறுதி கொண்டவராக இருக்கிறார். அவருக்கு மருத்துவ குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தனது தாய் சோனியா காந்தி சார்பிலும் விசாரித்துக் கொண்டேன்.இவ்வாறு ராகுல் கூறினார்.

More News >>