பிரசவத்திற்காக மனைவியை 12 கி.மீ. சுமந்த கணவர் - குழந்தை இறந்தது

ஆந்திராவில் எட்டு மாத கர்ப்பிணியான மனைவியை பிரசவத்திற்காக 12 கிலோ மீட்டர் தூரம் சுமந்து வந்துள்ளார் கணவர். வழியிலேயே அப்பெண்ணுக்கு பிரசவம் நடந்துள்ளது. பிறந்த ஆண் குழந்தை இறந்துபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் விஜயநகரத்தில் மலைப்பகுதியை சேர்ந்தவர் ஜிண்டம்மா. 22 வயதாகும் ஜிண்டம்மாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மூன்றாவதாக கருத்தரித்திருந்தார். எட்டு மாத கர்ப்பிணியான அவருக்கு பிரசவத்திற்கான வலி தெரிய ஆரம்பித்தது.

அவர்கள் வாழ்வது மலைப்பகுதியாதலால், மருத்துவமனைகள் எதுவும் இல்லை. மருத்துவமனையில் சேர்ப்பதற்கு அவசர உதவி வாகனமான ஆம்புலன்ஸில் ஏற்றவேண்டுமானால், 12 கிலோ மீட்டர் நடந்து சென்றாக வேண்டும்.

ஆகவே, ஜிண்டம்மாவின் கணவர், நீளமான மூங்கில் தடியில் புடவையால் பிரம்பு கூடை ஒன்றை கட்டி அதில் வைத்து தூக்கிக் கொண்டு வந்துள்ளார். உதவியாக கிராமத்தினர் சிலரும் கூடவே வந்துள்ளனர்.

வழியில் ஜிண்டம்மாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு, ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், உரிய மருத்துவ கண்காணிப்பு மற்றும் உதவி இல்லாததால் குழந்தை பரிதாபமாக மரித்துப் போனது.

மருத்துவம் மற்றும் போக்குவரத்து வசதிகள் நவீனமாகியுள்ள இந்த காலத்தில், மருத்துவ உதவி பெறுவற்கு 12 கிலோ மீட்டர் நடக்குமளவு பின்தங்கியுள்ள இடங்கள் இருப்பது மிகவும் வருந்தத்தக்கது.

More News >>