தூத்துக்குடி ஆட்சியருக்கு நீதிமன்றம் அறிவுரை

குற்றமிழைக்காதவர்களை தண்டிக்கக் கூடாது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுரை வழங்கியுள்ளது.  தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக கைதான ஹரிராகவன் ஜாமினில் விடுதலையான பிறகு அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. இதனை ரத்து செய்யக் கோரி அவரது மனைவி சத்யபாமா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.    இந்த வழக்கு நீதிபதிகள் செல்வம், பஷீர் அகமது அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. ஜாமினில் விடுதலை செய்யப்பட்டவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் போடுவது சட்ட விரோதமான என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.    வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், "தமிழகம் ஜனநாயக நாடா அல்லது போலீஸ் ஆட்சி செய்யும் சர்வாதிகார நாடா என கேள்வி எழுப்பினர். அத்துடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்தார்.   அதன்அடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று ஆஜரானார்.  அப்போது பேசிய நீதிபதி, "குற்றமிழைக்காதவர்களை தண்டிக்கக் கூடாது. ஒருவரின் சுதந்திர உரிமையை பறிக்கும் நோக்கில் காவல்துறையினர் சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ள கூடாது" என தூத்துக்குடி ஆட்சியருக்கு அறிவுரை வழங்கினார்.    "வழக்கின் தன்மையை கடைசி நிமிடம் வரை ஆராய்ந்து பார்க்க வேண்டும். நீதிமன்ற பிறப்பித்த உத்தரவுகளை மதிக்க வேண்டும்" எனவும் நீதிபதிகள் கூறினர்.    காவல்துறையின் நடவடிக்கை நீதிமன்றம் வழங்கிய ஜாமின் நீர்த்து போகும் வகையில் இருப்பதாகக் கூறிய நீதிபதி, ஹரிராகவன் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து வழக்கை முடித்து வைத்தனர்.
More News >>