ஜெயலலிதாவை கொச்சைபடுத்தினாரா கமல்...?

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை மறைமுகமாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கொச்சைப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. எனினும், முதல் சீசன் அளவிற்கு இந்த சீசன் சுவாரஸ்யமாக இல்லை என ரசிகர்கள் குறை கூறுகின்றனர்.

ரசிகர்களை கவர சமீபத்தில், போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று வழங்கப்பட்டது. அதில் சர்வாதிகாரி போல நடந்து கொள்ள வேண்டும் . அந்த டாஸ்க்கில், "கடந்த காலங்களில் தமிழகத்தில் சர்வாதிகாரியால் என்ன நடந்தது என தெரியாது" என சக போட்டியாளர்கள் கூறுவது போல் இருந்தது.

இதனை அடுத்து, இந்த டாஸ்க் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளதாக சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக காவல்நிலையத்தில் அவர் அளித்த புகார் மனுவில், "பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை வளர்ப்பது தொடர்பாக நிறைய பேசி வருகிறார்."

"அந்த நிகழ்ச்சியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை மறைமுகமாக கொச்சைபடுத்திய பேசுகிறார். தற்போது, அவரது ஏற்பாட்டில் சர்வாதிகாரி என்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டு, ஐஸ்வர்யா என்ற பெண் சர்வாதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் பொதுமக்களைக் கொடுமைப்படுத்தும் செயல்களை செய்து வருகிறார்"

"ஜெயலலிதாவை மறைமுகமாக கொச்சை படுத்தி பேசும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த வழக்கறிஞர் கேட்டுக்கொண்டுள்ளார்.

More News >>