தேர்வில் காப்பி அடித்து கையும் களவுமாக பிடிபட்ட ஆசிரியர்கள்

கர்நாடகா மாநிலத்தில் தகுதி தேர்வில் காப்பி அடித்த ஆசிரியர்கள் கையும் களவுமாக பிடிபட்டனர்.

மாணவர்கள் தேர்வில் காப்பி அடிப்பதை பார்த்திருக்கிறோம் ஆனால், ஆசிரியர்களே ஒட்டுமொத்தமாக தேர்வில் காப்பியடித்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏறடுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹூப்ளி தார்வாடு மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு நடந்தது. தார்வாட் நகர் அரசு பள்ளியில் நடந்த தேர்வில் பங்கேற்ற ஆசிரியர்கள், பயிற்சி புத்தகத்தை மறைத்து வைத்து தேர்வு எழுதியுள்ளனர்.

இதனை நோட்டமிட்ட, அப்பள்ளியின் ஊழியர் ஒருவர் இது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர்.

அங்கு தேர்வெழுதிகொண்டிருந்த அனைவருமே தேர்வு பயிற்சி புத்தகத்தை வைத்து காப்பி அடித்துக்கொண்டிருந்தை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அனைவரிடமும் பயிற்சி புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் பின்னர் அனைவரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

மாணவர்கள் காப்பியடித்தாலே தகுதிநீக்கம் செய்யும் பள்ளிக்கல்வித்துறை, ஆசியர்களாக இந்த செயலுக்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் சாதித்து வருகிறது. அனைவரும் ஒட்டுமொத்தமாக காப்பி அடித்திருப்பதால், இந்த ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.

More News >>