சசிகலா, தினகரன் ஆதரவாளர்கள் மிரட்டல்...ஜெ.தீபா புகார்

சமூக வலைத்தளம், தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கும் சசிகலா மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா புகார் தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இரண்டு புகார்கள் கொடுத்துள்ளார். ஒரு புகாரில், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர்களான சசிரேகா மற்றும் சைதை கண்ணன் என்பவர்கள் சமூக வலைத்தளங்களில், தன்னையும் தனது கணவர் மாதவனையும் பற்றி அவதூறு கருத்துகளை தெரிவிப்பதோடு, கொலை மிரட்டல் விடுக்கும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மற்றொரு புகாரில், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் நேரடியாகவும், அவர்களது ஆதரவாளர்கள் மூலம் தொடர்ந்து தமக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், தான் கலந்துகொள்ளும் பொதுகூட்டங்களில் ஆயுதங்களுடன் அடியாட்களை அனுப்பி மிரட்டல் விடுப்பதாகவும், ஏற்கனவே வேலூர் பொதுக்கூட்டத்தில் இதுபோன்று மிரட்டல் விடுத்தவர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டதாகவும், மனுவில் தெரிவித்துள்ளார்.

இவை தனது அரசியல் செயல்பாடுகளுக்கும், கட்சி பணி ஆற்றுவதற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும், ஆகையால் தமக்கு மிரட்டல் விடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், இவர்களால் தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தமக்கும் வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என புகார் மனுவில் ஜெ. தீபா கேட்டுக்கொண்டுள்ளார்.

More News >>