கலிபோர்னியாவில் சீக்கியர் மீது இனவெறி தாக்குதல்

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் சீக்கிய இனத்தவர் ஒருவர் மீது வெள்ளை இனவெறியர்கள் இருவர் தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த வாரம் நடைபெற்ற இந்த இனவெறி தாக்குதல் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 50 வயது சீக்கியர் ஒருவர், கெய்ஸ் பகுதியில் உள்ளூர் தேர்தல் பரப்புரை பதாகைகள் வைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வெள்ளையர் இருவர், "உன்னை யாரும் இங்கே வரவேற்கவில்லை. உன் நாட்டுக்குத் திரும்பிப் போ" என்று கூறி தாக்கத் தொடங்கினர். இரும்பு கம்பி கொண்டு தலையில் அடித்தனர். அவர் தலைப்பாகை அணிந்திருந்ததால், பெரிய காயம் ஏதும் ஏற்படாமல் தப்பினார்.   அந்த இனவெறியர்கள், சீக்கியரின் டிரக்கின்மேல் "உன் நாட்டுக்குத் திரும்பிப் போ" (Go back to your country) என்று கறுப்பு மையால் ஸ்பிரே செய்து, கூடவே வெள்ளை இனவெறி சின்னமாக கருதப்படும் கெல்டிக் சிலுவையை வரைந்திருந்தனர். தாக்கப்பட்டவரைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், அவர் 35 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவில் வசித்து வருகிறார் என்று முகநூல் பதிவு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.   இனவெறியால் கொலை கருவிகளை கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்ற நோக்கில் காவல்துறை விசாரித்து வருவதாகவும், குற்றத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண, சம்பவத்தை பார்த்த சாட்சிகளின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் ஸ்டெயின்ஸ்லாஸ் கவுண்டி ஷெரீஃப் அலுவலகம் தெரிவித்துள்ளது.
More News >>