நாடு முழுவதும் மோட்டார் வாகன தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் தொடங்கியது

மோட்டார் வாகன சட்ட மசோதாவில் திருத்தம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தம் போராட்டம் தொடங்கியது. இதனால், பல லட்சம் வாகனங்கள் ஓடவில்லை.

மோட்டார் வாகன சட்ட மசோதாவில் திருத்தம் செய்வது குறித்து மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால், மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு வந்தால் தொழிலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்று நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.

இதுதொடர்பாக, மத்திய தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள எல்பிஎப், பாட்டாளி, விடுதலை சிறுத்தை, மறுமலர்ச்சி, தேமுதிக போன்ற சங்கங்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்தனர்.

அதன்படி, தமிழகம் உள்பட நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தம் போராட்டம் தொடங்கியது. இதனால், அரசு போக்குவரத்து, ஆட்டோக்கள், கால் டாக்சிகள் உள்பட சுமார் ஒரு லட்சம் வாகனங்கள் ஓடவில்லை.

இந்த போராட்டம் நள்ளிரவு வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், வேன்கள் இயக்கப்படவில்லை அரசுப் போக்குவரத்து கழகங்களில் உள்ள தொழிற்சங்கங்களும் வாகனங்களை இயக்காததால் பொது போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை, பல்வேறு போக்குவரத்து தொழிற்சங்கங்கள், வாகன உரிமையாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் பங்கேற்றுள்ளதால் பல லட்சம் வாகனங்கள் ஓடவில்லை.

இந்நிலை, புதுச்சேரியிலும் தொடர்ந்துள்ளது. சென்னையிலும் போராட்டம் தொடர்ந்ததால், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் சிரமப்பட்டனர். இதனால், பல தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

More News >>