தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கர்நாடகா மாநிலத்ல் வெளுத்து வாங்கும் கனமழை எதிரொலியாக, தமிழகத்தில் உள்ள 6 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கனமழையால் அம்மாநில அணைகள் விரைவாக நிரம்பி வருவதால் கபினி அணையில் இருந்து 70,000 கனஅடி, கேஆர்எஸ் அணையில் இருந்து 55,000 கனஅடி என கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் 1.25 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

நீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, மேட்டூர் அணையின் தற்போதைய நீர்திறப்பு 25,000 கன அடியில் இருந்து 30,000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பெய்து வரும் கனமழையை அடுத்து தமிழகத்தில் காவிரி கரையோரமுள்ள, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய 6 மாவட்ட மக்களுக்கு மத்திய அரசு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

More News >>