கேரளாவுக்கு ரூ.5 கோடி நிவாரண நிதி.. தமிழக முதலமைச்சர் அறிவிப்பு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு 5 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக, கேரள மாநிலத்தின் பெரும்பாலான பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளம் சூழ்ந்த பகுதியில் மின் இணைப்பு, தொலை தொடர்பு, போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் கேரள மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள ராணுவத்தை அனுப்பி உதவ வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதனிடையே, கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு 5 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.

மழை, வெள்ளம், மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியில் இருந்து இந்த தொகை வழங்கப்படும் எனவும் கேரள அரசு கேட்டுக்கொண்டால், தமிழக அரசு எந்நேரத்திலும் உதவ தயாராக இருப்பதாக அவர் செய்திகுறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

More News >>