தமிழகம் வந்த மலேசியா பெண் மாயம்: மேட்டுப்பாளையத்தில் பரபரப்பு

தமிழகத்திற்கு சுற்றுலா வந்த மலேசியா பெண் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மலேசியாவை சேர்ந்தவர் சிவநேசன். இவரது மனைவி புவனா. குழந்தைகள் பிரகதி, ஜனனி. இவர்கள், குடும்பத்துடன் கடந்த 2ம் தேதி சென்னை வந்தனர்.

தமிழகத்தை சுற்றி பார்க்க வந்த அவர்கள் சென்னையில் தங்கியிருந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில், 8ம் தேதி ஊட்டி செல்வதற்காக சென்னையில் இருந்து மேட்டுப்பாளையம் சென்றுள்ளனர். அங்கு இரவு 11.30 மணிக்கு காரமடை ரோட்டில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியுள்ளனர்.

இரவு அங்கு தங்கிய நிலையில் காலை சிவநேசன் எழுந்து பார்க்கும் போது அதிர்ச்சி காத்திருந்தது. அருகில் தூங்கிக்கொண்டிருந்த தனது மனைவியை காணவில்லை. குழந்தைகளும் தனது தாயை காணாமல் தவித்தனர். சிவநேசன் அருகில் உள்ள சுற்றுவட்டாரத்தில் தேடினார். ஆனால் புவனாவை பற்றி தகவல் கிடைக்கவில்லை. புவனாவின் பாஸ்போர்ட், கைப்பை, செல்போன் எடுத்து சென்றுள்ளார். அவரின் கைபேசியை தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது.

பயந்து போன சிவநேசன் அருகில் இருந்த மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் பதிவு செய்துள்ளார். மலேசிய பெண் ஒருவர் தமிழகத்திற்கு வந்து மாயமானது மேட்டுப்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More News >>