தண்ணீரில் மிதக்கும் விமான சேவை - மத்திய அமைச்சர் தகவல்

மத்திய அரசு, தண்ணீரில் மிதக்கும் கடல் விமான சேவையைத் தொடங்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

நீரில் மிதந்தபடி பறந்து செல்லும் திறன் கொண்டது கடல் விமானம். இது தண்ணீரில் தரையிறங்கவும், அதேபோல தண்ணீரில் மிதந்து புறப்பட்டுச் செல்லும் வசதியையும் கொண்டது.

இந்தியா முழுவதும் தண்ணீரில் மிதக்கும் கடல் விமான சேவையைத் தொடங்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகத் தெரிகின்றது.

இதற்கு ஏற்ப நாட்டின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் விமான நிலையங்களை அமைப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து அதற்கான விதிமுறைகளை மத்திய விமான போக்குவரத்துறை வகுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து, சுரேஷ் பிரபு தமது டுவிட்டர் பக்கத்தில், “கடல் விமானங்கள் சுற்றுலா தலங்களை பிரபலப்படுத்துவதோடு அவற்றுடன் ஆன்மீக தலங்களையும் இணைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முதல் கடல் விமான நிலையம் ஒடிசாவின் சில்கா ஏரியிலும் அதைத்தொடர்ந்து குஜராத் சபர்மதி ஆறு, சர்தார் சரோவர் அணையில் அமைக்கப்படும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்த விமான சேவை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவு படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

More News >>