மூன்று இதயங்களை கொண்டவர் ஸ்டாலின் - துரைமுருகன் பெருமிதம்

சென்னையில் நடந்த திமுக செயற்குழு கூட்டத்தில், ஸ்டாலின் தலைமையை ஏற்க தயாராக இருப்பதாக முக்கிய நிர்வாகிகள் வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். அப்போது பேசிய துரைமுருகன், பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதியின் மூன்று இதயங்களை கொண்டவர் ஸ்டாலின் என்றார்.

சென்னை தேனாம்பேட்டையிலுள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், அக்கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு, இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து செயற்குழு உறுப்பினர்கள் எல்லாம் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர்.

இந்த கூட்டத்தில் பேசிய கட்சியின் முதன்மை செயலாளர் துரைமுருகன், திமுகவை வழிநடத்த ஸ்டாலின் என்னும் ஆலவிழுதை கருணாநிதி விட்டுசென்றுள்ளார். பெரியார், அண்ணா, கருணாநிதியின் மூன்று இதயங்களை கொண்டவர் ஸ்டாலின். அவரை வெல்ல தமிழகத்தில் ஒரு கொம்பனும் இல்லை” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய திமுக எம்.எல்.ஏ, ஜெ. அன்பழகன், திமுக தலைவர் கருணாநிதியாகத் தான் ஸ்டாலினை பார்க்கிறோம். கருணாநிதி விட்ட இடத்தில் இருந்து நீங்கள் தொடர வேண்டும்” என்றார்.

இதே போல் மேடையேறி பேசிய கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் ஸ்டாலின் திமுக தலைவராக வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்துள்ளனர். விரைவில் கூட உள்ள திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில், செயல் தலைவர் ஸ்டாலின், போட்டியின்றி ஏகமனதாக திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

More News >>